மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத அரசு திருச்சியில் தவெக தலைவர் விஜய் அதிரடிப் பிரச்சாரம்!
திருச்சி
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக அரசின் "பொய் வாக்குறுதிகள்" மீது தாக்குதல்....
கடந்த 2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டிய விஜய், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் எங்கே? கரும்புக்கான ஆதார விலை 4000 ரூபாய் என்னவானது? ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுந்தம் பருப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டார்கள்,என்று சாடினார். மேலும், நீட் தேர்வு ரத்து குறித்த திமுகவின் நிலைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கினார்.
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதை வாக்குறுதிகளாகக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதே இவர்களின் வேலை. அடுத்த செட் பொய் வாக்குறுதிகளும் தயாராகிவிட்டது. ஆனால் தவெக அப்படிச் செய்யாது. மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் என அவர் உறுதியளித்தார்.
தவெக-வின் "அன்னபூரணி சூப்பர் 6" மற்றும் அதிரடி வாக்குறுதிகள்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து விஜய் அறிவித்த முக்கிய வாக்குறுதிகள்:
அன்னபூரணி சூப்பர் 6:
தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
பெண்களுக்கான நலத்திட்டங்கள்: திருமணமாகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்க நகை மற்றும் பட்டுச் சேலைவழங்கப்படும்.
60 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி மற்றும் ரேஷன் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள்....
திருச்சியில் உள்ள ஒரு அமைச்சர், நகராட்சித் துறை வேலைகளுக்கு லஞ்சம் பெற்றுத் தகுதியானவர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளதாக விஜய் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "2000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தருவதாகக் கூறி, வெறும் 5 பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த இந்த அரசைத் தூக்கி எறிவோமா?" என்று தொண்டர்களிடம் வினாவினார
மாற்று அரசியல் முழக்கம்....
காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளை முறையே 'கதர் கூட்டணி' மற்றும் 'காவி கூட்டணி' என விமர்சித்த அவர், இரு தரப்பும் கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதாகவும், உண்மையில் இரண்டும் ஒன்றுதான் என்றும் சாடினார். கரூர் நிகழ்ச்சி ஒரு சூழ்ச்சி என்றும், தவெக-விற்குப் பல நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
"100 சதவீத நியாயமான ஆட்சியைத் தருவேன். என்னை நீங்கள் நம்பலாம். விசில் சின்னத்திற்கு வாக்களித்து, எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்," என்ற வேண்டுகோளுடன் தனது உரையை நிறைவு செய்தார். விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் ஆதரவளித்து வெற்றி அடைய செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்
What's Your Reaction?
Like
1
Dislike
1
Love
1
Funny
0
Angry
1
Sad
0
Wow
0