திண்டுக்கல்:
பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது பெரியகலையம்புத்தூர். இங்குள்ள ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், பழனி சார் ஆட்சியர் கிஷண்குமார் ஆகியோர் கொடியாசைத்து தொடங்கி வைத்தனர்.
வாடிவாசலில் இருந்து முதல்காளையாக பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை மற்றும் பல்வேறு கோவில் காளைகள் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் , திருப்பூர், ஈரோடு கோவை, கரூர், மதுரை, திருச்சி,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 600க்கும்மேற்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முற்பட்டனர்.
3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சிமுறையில் வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். துள்ளி வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து அடக்கமுயன்ற காட்சி காண்போரை வியக்கச் செய்தது. மாடுகள் முட்டியதில் சில மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம்ஏற்பட்டது. பார்வையாளர்கள் மைதானத்திற்குள் புகுந்து விடாதபடி 2 அடுக்கு தடுப்புகள்அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், சேர், குத்துவிளக்கு, செல்போன், சுவர்கடிகாரம், உள்ளிட்டபொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.
அதேபோல அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடை மருத்துவர்களும், டாக்டர்களும் முகாமிட்டிருந்தனர். டி.எஸ்.பி தனஞ்ஜெயன் தலைமையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சார் ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் நெய்க்காரப்பட்டி பேரூராட்சி செயலாளர் அபுதாஹிர் மற்றும் ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.